Published : 21 Oct 2017 08:13 AM
Last Updated : 21 Oct 2017 08:13 AM

ஜெ. மரணம் குறித்த விசாரணை: அக்.25 முதல் தொடங்குகிறது

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை அக்.25-ம் தேதி முதல் நீதிபதி ஆறுமுகசாமி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்தாண்டு செப். 22-ம் தேதி இரவு 10.30 மணிக்கு உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 70 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிசம்பர் 5-ம் தேதி காலமானார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நிலையில், மத்திய அமைச்சர்கள், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வந்தனர். ஆனால், அவர்கள் ஜெயலலிதாவை பார்க்கவில்லை.

இந்நிலையில், சசிகலாவின் தலைமையை எதிர்த்து பிப்ரவரி 7-ம் தேதி வெளியேறி அதிமுகவில் தனி அணியை உருவாக்கிய தற்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி தர்மயுத்தம் தொடங்குவதாக அறிவித்தார்.

தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. அதற்கு சில தினங்கள் முன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

அணிகள் இணைந்த நிலையில், பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றும், பொய் சொன்னதற்காக மன்னிக்க வேண்டும் என்றும் கூறினார். இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சியினர் விசாரணை ஆணையத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தினர்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்துக்கு, சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கல்சா மகாலில் முதல் தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை நேற்று நீதிபதி ஆறுமுகசாமி பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, வரும் அக்.25- முதல் அவர் விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x