

சென்னை: பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில், இந்த நிதி ஆண்டுக்குள் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படும் என்றுஐசிஎப் பொதுமேலாளர் மால்யா கூறினார்.
பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎப்) வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகள் தயாரிப்பதற்கான நவீனத் தொழில்நுட்ப வசதிகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் அதிகாரிகள்நேற்று விளக்கினர்.
பின்னர், ஐசிஎப் பொதுமேலாளர் பி.கோபிநாத் மால்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2019-ல் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் 115 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ஆர்டர் கிடைத்துள்ளது. இதுவரை 21 வந்தே பாரத்ரயில்கள் தயாரிக்கப்பட்டு, ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இங்கு 16 பெட்டிகள் மற்றும் 8 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை 180 கி.மீ. வேகத்தில் இயக்க சோதனை செய்யப்பட்டு, 160 கி.மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, டெல்லி-ஆக்ரா இடையே அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 200 கி.மீ. வேகத்தில் இயங்கும் ரயில்கள் தயாரிக்கப்படும். அதேநேரத்தில், அதிவேக ரயில்கள் இயக்குவதற்கு ரயில் பாதைகள், சிக்னல்கள் ஆகியவற்றின் தரத்தை உயர்த்த வேண்டும்.
வந்தே பாரத் ரயிலில் ஒரு பெட்டியில் அதிகபட்சமாக 300 பேர் வரை பயணம் செய்யலாம். நடப்பாண்டில் 77 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என்றார்.