

சிவகாசி: சிவகாசி பேருந்து நிலையம் எதிரே பொத்துமரத்து ஊருணியில் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
சிவகாசி பேருந்து நிலையம் எதிரே உள்ள பொத்துமரத்து ஊருணியை தூர்வாரி பூங்கா அமைப்பதற்காக நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஊருணியை தூர்வார அளவீடு செய்தபோது, 4.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொத்துமரத்து ஊருணியில் 35 சதவீதத்துக்கும் அதிகமான ஆக்கிரமிப்புகளால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டிருந்தன.
2022 மே மாதம் பூமி பூஜையுடன் தூர்வாரும் பணி தொடங்கினாலும் தொடர் மழை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தூர்வாரும் பணி மந்த கதியில் நடந்தது.
கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஊருணியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றி தூர்வாரும் பணியைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவில் கடந்த மாதம் 4 வீடுகள், 3 வணிகக் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
இந்நிலையில், பேருந்து நிலையம் எதிரே இருந்த வணிகக் கடைகளை இடித்து அகற்றும் பணி நடந்தது. மண் அள்ளும் இயந்திரம் மூலம் 8 கடைகளும் இடித்து அகற்றப்பட்டன. ஒரு சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட கடைகளை இடிக்க முயன்றபோது, எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒருவர் தரையில் படுத்து ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும் அங்கு திரண்ட பொதுமக்கள், பாரபட்சம் ஏதும் இன்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் ஒரு சேர அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் டிஎஸ்பி தனஞ்ஜெயன், கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் அதன்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்,’ என்றார். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பாதியில் நிறுத்தினர்.