தேவகோட்டையில் மகனின் கல்லூரிக் கட்டணத்தை தவறவிட்ட தாய்: எடுத்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் வள்ளிமயிலிடம் பணத்தை ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் சரவணன். அருகில் ஆட்டோ ஓட்டுநர் கண்ணன்.
தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் வள்ளிமயிலிடம் பணத்தை ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் சரவணன். அருகில் ஆட்டோ ஓட்டுநர் கண்ணன்.
Updated on
1 min read

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மகன் கல்லூரிக்கு செல்லுத்த வேண்டிய ரூ.62,000-ஐ தவறவிட்டு தாய் தவித்த நிலையில், அதை எடுத்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை பலரும் பாராட்டினர்.

தேவகோட்டை அருகேயுள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபாலன். இவரது மனைவி வள்ளிமயில் (40) கல்லூரியில் படிக்கும் தனது மகன் படிப்பு செலவுக்காக ரூ.62,000-ஐ வங்கியில் செலுத்த ஸ்கூட்டரில் இன்று தேவகோட்டைக்கு வந்தார். அப்போது அவர் பணப்பையை தவறவிட்டார். பணத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் வேதனையில் இருந்தார்.

இந்நிலையில், ஆவரங்காட்டு பகுதியில் அவர் தவறவிட்ட பணப்பையை அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் கீழே கிடந்து எடுத்தார். அதை திறந்து பார்த்தபோது, ரூ.62,430 இருந்தது. இதையடுத்து அந்தப் பணப் பையை தேவகோட்டை நகர இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தார்.

பையில் இருந்த முகவரியில் தொடர்பு கொண்டு, வள்ளிமயிலை காவல் நிலையத்துக்கு வரவழைத்த இன்ஸ்பெக்டர், ஆட்டோ ஓட்டுநர் முன்னிலையில் பணத்தை ஒப்படைத்தார். மேலும் ஆட்டோ ஓட்டுநரின் இந்தச் செயலை பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து இன்ஸ்பெக்டர் கவுரவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in