Published : 29 Oct 2017 08:52 AM
Last Updated : 29 Oct 2017 08:52 AM

ஏடிஎம் காவலாளி கொலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நாகாலாந்து பொறியாளர் கைது

சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் காவலாளியாகப் பணியாற்றியவர் ரவி. இவர் கடந்த 2007 ஜூன் மாதத்தில் ஏடிஎம் மையத்துக்குள் கத்தியால் குத்தி, கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தும், குற்றவாளி பிடிபடாததால், விசாரணை கிடப்பில் கிடந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி, கூடுதல் காவல் ஆணையர் எம்.சி.சாரங்கன் மேற்பார்வையில் அண்ணா சதுக்கம் ஆய்வாளர் சபாபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், நாகாலாந்தைச் சேர்ந்த கணினி மென்பொருள் பொறியாளர் ரத்தோர் (37) என்பவர்தான் இந்த கொலையை செய்தவர் என்பது தெரியவந்தது.

டெல்லியில் கைது

இதையடுத்து, நாகாலாந்து, டெல்லிக்கு தனிப்படை போலீஸார் விரைந்தனர். டெல்லி யில் தலைமறைவாக இருந்த ரத்தோரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவரை நேற்று சென்னை அழைத்து வந்து நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியார் நிறுவனத்தில் ரத்தோர் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, ஏடிஎம்-மில் பணம் எடுக்கும்போது காவலாளி ரவியுடன் பிரச்சினை ஏற்பட்டதில், பேனா கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறியுள்ளார் என அண்ணா சதுக்கம் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x