

மதுரை: ஆடல், பாடல், கரகாட்டம், கபடிஉள்ளிட்டவை தொடர்பாக அனுமதி கேட்டு அளிக்கப்படும் மனுக்கள் மீது 7 நாட்களில் போலீஸார் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கோயில் விழாக்களில் ஆடல், பாடல், கரகாட்டம், கபடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கேட்டும், உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் போலீஸாரிடம் மனுக்கள் அளிக்கப்படுகின்றன. இதன் மீது காவல் துறையினர் உரிய காலத்தில் முடிவு எடுப்பதில்லை. எனவே, உரிய காலத்துக்குள் அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பலர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது போலீஸார் முடிவெடுக்காமல் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ஆடல், பாடல்,கரகாட்டம், கபடி உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அனுமதி கேட்டு தரப்படும் மனுக்கள் மீது பதில் அளிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. இந்த மனுக்கள் மீது காவல்ஆய்வாளர்கள் 7 நாட்களில் பரிசீலனை செய்து அனுமதி அளித்தோ அல்லது அனுமதியில்லை என்றோ உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு 7 நாட்களுக்குள் மனுக்கள் மீது உரிய முடிவு எடுக்காவிட்டால் அனுமதி வழங்கியதாகக் கருதப்படும்.
இது தொடர்பாக அனைத்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆடல்,பாடல், கரகாட்டம், கபடி உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு உரிய நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.