Published : 13 Oct 2017 10:31 AM
Last Updated : 13 Oct 2017 10:31 AM

டெங்கு தடுப்புக்கு வாசலில் சாணம்: யோசனை சொன்ன அமைச்சரை ட்விட்டரில் கலாய்த்த ராமதாஸ்

வீட்டு வாசலில் சாணம் தெளியுங்கள், டெங்கு கொசு வரவே வராது’ என்று யோசனை தெரிவித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு கொசு வராது: செல்லூர் ராஜு - அறிவியல், மருத்துவம் அத்தனைக்குமான நோபல் இவருக்குத் தான் தர வேண்டும்!" எனப் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக, மதுரை சோலையழகுபுரத்தில் நேற்று (வியாழக்கிழமை) அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் ஆகியோருடன் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுவை ஒழிக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது வீடுகளில் மூடப்படாத பாத்திரங்கள், குடங்களில் சேகரித்து வைத்த தண்ணீரை அப்புறப்படுத்த சொன்ன அமைச்சர், ‘முன்பெல்லாம் வீட்டு முற்றத்தில் மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து தெளித்ததால் எந்த கொசுவும் வரல. அதுபோல நீங்களும் வீட்டு முற்றத்தில் சாணத்தை தெளியுங்கள், எந்த கொசுவும் வராது. டெங்குவும் வராது’ என்றார்.

ஏற்கெனவே வைகை அணையில் இருந்து நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் திட்டத்தை அமல்படுத்தியதற்காக நெட்டிசன்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, சாணம் தெளிக்கும் யோசனையால் தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் கிண்டல் கேலிக்கு உள்ளாகி வருகிறார்.

சாதாரண மக்கள் கிண்டல் செய்துவந்த நிலையில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸும் கிண்டல் செய்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x