ரயில்வே சேவைகளுக்கு ரூ.2,000 நோட்டுகளை பயன்படுத்தலாம்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

ரயில்வே சேவைகளுக்கு ரூ.2,000 நோட்டுகளை பயன்படுத்தலாம்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: ரயில்வே டிக்கெட் முன்பதிவு, பார்சல் சேவை உள்ளிட்ட ரயில்வே சேவைகளுக்கு, ரூ.2,000 நோட்டுகளைப் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வேயில் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால், ஏராளமான ரயில் பயணிகள் படிப்படியாக பணமில்லாத பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றனர். ஐஆர்சிடிசி மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வது 83 சதவீதமாக அதிகரித் துள்ளது.

எனினும், மின்சார ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட், கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு, ரயில்வே உணவகங்கள், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற பலர் பணம் செலுத்தி வருகின்றனர். இந்த சேவைகளைப் பெற பயணிகள் ரூ.2,000 நோட்டுகளைப் பயன்படுத்தலாம். இதற்கு ரயில்வேயில் எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால், விதிகளை மீறி பணத்தை மாற்ற முயற்சிக்கக் கூடாது.

அப்படி விதிமீறல்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in