Published : 22 May 2023 06:48 AM
Last Updated : 22 May 2023 06:48 AM

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12-ல் ஏவப்படுகிறது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திராயன்-1 விண்கலத்தை அனுப்பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன்-2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டது.

இந்த விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதிசெயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியானஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

இந்த விண்கலம் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: நிலவு பற்றிய ஆய்வுக்கு தென்துருவத்தில் தரையிறங்க வேண்டியது அவசியம். அதைக் கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் லேண்டர், ரோவர்கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தமுறை விண்கலத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான்-2போல அல்லாமல் 42 நாட்கள் பயணத்துக்கு பின்னர் லேண்டர் கலன் ஆகஸ்ட் 22-ம் தேதி விண்ணில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றி பெற்றால் நிலவைபற்றிய பல்வேறு ரகசியகங்கள் வெளியுலகுக்கு தெரியவரும். இதற்கிடையே என்விஎஸ்-2 எனும்வழிகாட்டுதல் செயற்கைக்கோளும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் மே 29-ம் தேதிவிண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின் றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x