Published : 01 Oct 2017 01:53 PM
Last Updated : 01 Oct 2017 01:53 PM

தாயை நேசிப்பவர்கள் மிகச்சிறந்த உயரத்திற்குச் செல்வார்கள்: சிவாஜி மணிமண்டபம் திறந்து வைத்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த தினமான இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிவாஜி மணி மண்டபத்தைத் திறந்து வைத்தார்.

மணிமண்டபத்தில் உள்ள சிவாஜியின் படத்திற்கு துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் கலந்துக் கொண்டனர்.

மணிமண்டபம் திறப்பு விழாவில் சிவாஜி குடும்பத்தினர் ராம்குமார், பிரபு மற்றும் விக்ரம் பிரபு பங்கேற்று உள்ளனர். மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினி, கமல், நடிகர்கள் ராஜேஷ், விஜயகுமார், நாசர், சரத்குமார், விஷால், ராதிகா, கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளனர்.

மணி மண்டபத்தைத் திறந்து வைத்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பாராட்டப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் என்றார். நடிகர் திலகம் சிவாஜி பெயரில் விருதை அறிவித்தவர் ஜெயலலிதா என்றும் கூறினார்.

தாயை நேசிப்பவர்கள் மிகச்சிறந்த உயரத்துக்கு வந்ததில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் உதாரணம். உலகத் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

விரைவில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தப்படும், என்று கூறினார் ஓ.பன்னீர் செல்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x