Published : 03 Oct 2017 08:49 AM
Last Updated : 03 Oct 2017 08:49 AM

தமிழக பொறுப்பில் இருந்து விடை பெற உள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு

தமிழகத்தின் புதிய ஆளுநர் விரைவில் பொறுப்பேற்கவுள்ள நிலையில், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து மகாராஷ்டிர ஆளுநரான சி.எச்.வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 13 மாதங்களாக அவர் தமிழக ஆளுநர் பொறுப்பை கவனித்து வந்தார்.

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையை சமாளிக்க முழு நேர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித், கடந்த சனிக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் விரைவில் சென்னை வந்து ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்தில் இருந்து விடை பெறுவதையொட்டி அவருக்கு மலர்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அமைச்சர் டி.ஜெயக்குமாரும் உடனிருந்தார். தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஆளுநர் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x