கோவையில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட சிறுநீரகம்: பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தி சாதனை

கோவையில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட சிறுநீரகம்: பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தி சாதனை
Updated on
1 min read

ஈரோடு: கோவையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் ஆம்புலன்ஸ் மூலம் ஒரு மணி நேரத்தில் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு சிறுநீரகம் செயல் இழந்தவருக்கு பொருத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த 41 வயது நோயாளிக்கு சிறுநீரகம் செயல் இழந்தது. அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

3 ஆண்டுகளாக காத்திருப்பு: மேலும், தமிழ்நாடு உடல் உறுப்பு தான அமைப்பில் பதிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாக காத்திருந்தார். இந்நிலையில் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 62 வயதுடையவரின் சிறுநீரகம், கோபியைச் சேர்ந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கோபியைச் சேர்ந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து கோவையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஒரு மணி நேரத்தில் சிறுநீரகம் கொண்டு வரப்பட்டு, மருத்துவர் சரவணன் தலைமையிலான குழுவினர் கோபியைச் சேர்ந்தவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தனர்.

இதுகுறித்து, ஈரோட்டைச் சேர்ந்த தனியார் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் சரவணன் கூறுகையில், ‘கோபியைச் சேர்ந்தவருக்கு குரோனிக் கிட்னி வியாதி (சிகேடி) என்ற நோய் பாதிப்பு காரணமாக சிறுநீரகம் செயலிழந்து விட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக எங்களது மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது, கோவையிலிருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப் பட்டுள்ளது, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in