சுற்றுலா துறை மூலமாக ரூ.1,500 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

சுற்றுலா துறை மூலமாக ரூ.1,500 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

Published on

உதகை: சுற்றுலா துறை மூலமாக ரூ.1500 கோடியில் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் இன்று 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களான நீலகிரி எம்.பி. ஆ.ராசா, சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசும்போது, “நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 349 பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கட்டணமில்லா பேருந்து மூலமாக, நீலகிரி மாவட்டத்தில் 48 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மேலும், சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ரூ.5 கோடியில் பல்வேறு சாகச விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் ரூ.125 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகம் முழுவதும் ரூ.1,500 கோடியில் சுற்றுலா துறை மூலமாக, பல்வேறு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.

கூடலூர் அருகே தேவாலா தோட்டக்கலைத் துறை பண்ணையில் ரூ.3 கோடியில் சுற்றுலா தலம் அமைக்கப்படவுள்ளது. தொட்டபெட்டா முதல் மந்தாடா வரை ரோப் கார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதகை பைக்காரா அணையில் 200 பேர் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில், மிதவை உணவகம் அமைக்கப்படவுள்ளது. நடுவட்டம் பகுதியிலுள்ள பழமை வாய்ந்த சிறைச்சாலை புனரமைக்கப்பட்டு, அருங்காட்சியகமாக மாற்றப்படும். குன்னூர் பகுதியிலுள்ள டால்பின்நோஸ், பக்காசூரன் மலை, லேம்ஸ்ராக் ஆகியவைகள் மேம்படுத்தப்படும்” என்றார்.

நீலகிரி எம்.பி. ஆ.ராசா பேசும்போது, ”நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டது மட்டுமின்றி, இந்திய மக்களுக்கு அப்போதே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் ஜான் சலீவன். இதுபோன்று சிறந்த மனிதர்கள் இருந்துள்ளனர். எனவே, அவர்களது வாரிசுகளை அழைத்து கவுரவிப்பதில் பெருமையடைகிறேன். மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகளின் நிதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

விழாவில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் ஆர்.கணேஷ் (உதகை), பொன்.ஜெயசீலன் (கூடலூர்), மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி, ஜான் சலீவனின் வாரிசு ஓரன் சலீவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in