Published : 01 Oct 2017 10:20 AM
Last Updated : 01 Oct 2017 10:20 AM

ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: வழக்கறிஞர் உட்பட 2 பேர் கைது

தனியார் ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் பிரபல வழக்கறிஞர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே செந்தூர் ரெசிடென்ஸி என்ற தனியார் ஓட்டல், தங்கும் விடுதி உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், திடீரென ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் விடுதியின் வரவேற்பறை கண்ணாடி நொறுங்கியது.

தகவலறிந்த கன்டோன்மென்ட் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினையில் இந்த தாக்குதல் நடந்ததாகவும், திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரகுமார், சத்திரம் பேருந்து நிலைய பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரகுமார், ராஜேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ஓட்டல் உரிமையாளர் மகேஷ் மூலமாக ராஜேஷ் என்பவர், கே.கே.நகரைச் சேர்ந்த கருப்பையாவிடம் ரூ.14 கோடி கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால், ராஜேஷ் அதற்கு ஈடாக கொடைக்கானலில் இருந்த தனக்கு சொந்தமான இடத்தை கொடுத்துவிட்டார். அதன்பின், ரூ.14 கோடிக்கு வட்டி பணத்தை கருப்பையாவுக்கு தருமாறும், ராஜேஷிடம் வாங்கிய ஆவணங்களை திருப்பித் தருமாறும், இல்லாவிட்டால் ஓட்டலை நடத்த முடியாது எனவும் கூறி வக்கீல் ராஜேந்திரகுமார் மகேஷை மிரட்டியதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் நடந்ததாகவும் தெரியவந்துள்ளது. எனவே ராஜேந்திரகுமார், ராஜேஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x