Published : 19 May 2023 06:12 AM
Last Updated : 19 May 2023 06:12 AM

மத்திய தொழிலாளர் சட்டங்களை ஏற்க வேண்டாம் - மு.சண்முகம் எம்.பி. வேண்டுகோள்

சென்னை: மத்திய தொழிலாளர் சட்டங்களை ஏற்க வேண்டாம் என தொமுச பொன்விழா மாநாட்டில் முதல்வரிடம் தொமுச பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி., வேண்டுகோள் விடுத்தார்.

தொமுச பேரவையின் 25-ம்ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 3 நாள் பொன்விழா மாநாடு சென்னை, கலைவாணர் அரங்கில் மே 16-ம் தேதி வெகு விமர்சையாகத் தொடங்கியது.

அன்றைய தினம் தொழிற்சங்கத் தலைவர்களின் வாழ்த்துரையைத் தொடர்ந்து திமுக துணைபொதுச்செயலாளர் ஆ.ராசா, தொமுச பேரவையின் பொதுக்குழுவைத் தொடங்கி வைத்தார்.

இறுதிநாளான நேற்று, கனிமொழி எம்.பி., அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தலைவர்களின் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. மாலையில் சென்னை, சிவானந்தா சாலையில் தொமுச பேரணியை திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். தொமுச நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் பேரவையின் கொடியை ஏந்தி பேரணியாக சென்று, கலைவாணர் அரங்கத்தை அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து மாநாடு நிறைவு நிகழ்ச்சியில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரிடம் தொழிலாளர்கள் சார்பில் திமுகவுக்கு ரூ.5 கோடி நிதியை தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி., வழங்கினார். தொடர்ந்து பொன்விழா மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் பெற்று கொண்டார்.

விழாவில் வரவேற்புரையாற்றி தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி.பேசியதாவது: ‘‘மத்தியில் உள்ள ஆட்சி தொழிலாளர்கள் நலன் சார்ந்த 44 சட்டங்களில் 15-ஐ நீக்கி, 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக கொண்டு வந்திருக்கிறது. அவை முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் போராடிக் கொண்டிருந்த போது, எந்த விவாதமும் இல்லாமல் அச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டனர்.

இவ்வாறு மத்தியில் சட்டம் இயற்றப்பட்டாலும் மாநில அரசு விதிகளை உருவாக்கி, ஏற்று கொண்டால் மட்டுமே அதனை அமல்படுத்த முடியும். பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் இச்சட்டத்துக்கான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் முதல்நிலை அறிவிக்கை வெளியிட்ட நிலையில், எதிர்ப்பு காரணமாக இறுதி அறிவிக்கை வெளி யிடப்படவில்லை.

வடகிழக்கு மாநிலங்களில் விதிகள் தயார் கூட செய்யப்படவில்லை. எனவே, அனைத்து தொழிற்சங்கம் சார்பில் விதிகளைத் தயார் செய்ய வேண்டாம் என பாஜக அல்லாத மாநில முதல்வர்களிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். இச்சட்டத்துக்கான விதியை தயார் செய்ய வேண்டாம், இச்சட்டத்தை நிறுத்தலாம் என முதல்வரை நான் கேட்டுக் கொள்கிறேன்.

பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணத்துக்கு ரூ.8,500 கோடி நிதியை முதல்வர் வழங்கியுள்ளார். இதன் மூலம்போக்குவரத்து கழகங்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றன. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும், தங்களின் உரிமைகளைக் கூறுவோருக்கும் ஆக்கம் ஊக்கம் அளிப்பவர் முதல்வர். மேலும், தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை மிஞ்சும் அளவுக்கு முதல்வர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் உரையாற்றினர். தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன் நன்றியுரையாற்றினார்.

மாநாட்டில், அமைச்சர்கள் க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு, மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோ.மோகன்குமார், பொதுச்செயலாளர் த.சரவணகுமார், பொருளாளர் கி.சீனிவாசன், கலைஞர் நகர் பணிமனைச் செயலாளர் அ.கதிரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x