Published : 15 Apr 2014 07:21 PM
Last Updated : 15 Apr 2014 07:21 PM

திருநங்கைகளுக்கு மூன்றாவது பாலின அங்கீகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கருணாநிதி பாராட்டு

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்புக்கு, திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், "அனைத்துச் சமுதாயத்தினராலும், ஒதுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள அரவாணிகளின் நலன்களைப் பாதுகாக்கத் தக்க வகையில், அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை முறைப்படி பரிசீலித்து முடிவுகள் மேற்கொள்வோம்" என்று தெரிவித்திருந்தோம்.

"சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்" என்பதற்கிணங்க, தி.மு. கழக ஆட்சியில் 15-4-2008 அன்று "தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்" தொடங்கப்பட்டு, 3,878 அரவாணிகள் கணக்கெடுக்கப்பட்டு, 2,328 அரவாணிகளுக்கு அடையாள அட்டைகளும், 1,238

பேருக்குக் குடும்ப அட்டைகளும், 133 பேருக்குத் தொகுப்பு வீடுகளும், 100 பேருக்குத் தையல் இயந்திரங்களும், 482 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களும், 585 பேருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ அட்டைகளும் வழங்கப்பட்டன.

2008-2009இல் அரவாணிகள் நல வாரியத்தின் மூலம் 25 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. அரவாணிகளுக்காக 150 சுய உதவிக் குழுக்கள் அமைப்பதற்கு 6 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாயும், சுய தொழில் தொடங்க 64 இலட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. 2010-2011ஆம் ஆண்டில் அரவாணிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் வகையில் வாரியத்திற்கென ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

திருநங்கைகளின் நலனுக்காக தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோது, இவ்வளவையும் செய்ததோடு, அண்மையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும், "தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும், அகில இந்திய அளவில் திருநங்கைகளுக்கு வழங்கிட தி.மு. கழகம் பாடுபடும்.

மேலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அரவாணிகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு. கழகம் வலியுறுத்தும்" என்றும் தெரிவித்திருந்தோம்.

தேர்தல் அறிக்கையில் கூறி, அதற்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே, தி.மு. கழகம் தேர்தல் அறிக்கையிலே கூறியது நிறைவேறுகின்ற வகையில் இன்று மாலை நாளேடுகளில், திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அறிவிப்பு, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது எனச் செய்தி வெளிவந்துள்ளது.

இந்தத் தீர்ப்பு திருநங்கைகள் வாழ்வில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அந்தத் தீர்ப்பில், "மத்திய அரசும், மாநில அரசுகளும் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறுபான்மையினருக்கு உள்ள எல்லா உரிமைகளையும் வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் சிறுபான்மையினருக்கு உள்ள உரிமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்" என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக பல ஆண்டுக் காலமாக குரல் கொடுத்த தி.மு. கழகத்திற்கு இந்தத் தீர்ப்பு பெரிதும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதியரசர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோருக்கும், இந்த வழக்கைத் தொடுத்த லெட்சுமிநாராயணன் திரிபாதிக்கும் நம்முடைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்த முடிவினை தி.மு. கழகத்தின் சார்பில் பெரிதும் வரவேற்று, பாராட்டுகிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x