அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிவடைந்த 310 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி

அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிவடைந்த 310 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
Updated on
1 min read

சென்னை: மே தினத்தை முன்னிட்டு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்கள் மற்றும் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார். இத்திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான, கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும் 310 நலிந்த தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று தலா ரூ.1 லட்சம் வீதம், அண்ணா தொழிற்சங்க பேரவை வங்கிக் கணக்கில் இருந்து வரைவோலைகளாக, மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், தலைவர்தாடி ம.ராசு, கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in