கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

Published on

பழநி: பழநி அருகே கொடைக்கானல் மலைச் சாலையில் 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 22 பேர் டெம்போ வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் பழநிக்குப் புறப்பட்டனர். கொடைக்கானல் சவரிக்காடு அருகே மலைச் சாலையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த மன்னார்குடி முகேஸ்வரன்(15), திவ்யா(29), தன்சிகா(4), கவுரி(18), காயத்ரி(21), பாரதி செல்வன்(15), ஓட்டுநர் இளம்பரிதி (25) உள்ளிட்ட 22 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த பழநி போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தஞ்சாவூர் அருகேயுள்ள மடிகை ஊராட்சி காந்திகாலனியைச் சேர்ந்த மாரியம்மாள் (48) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in