இன்று கரையை கடக்கிறது ‘மொக்கா’ - தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் 2 நாள் மழைக்கு வாய்ப்பு

இன்று கரையை கடக்கிறது ‘மொக்கா’ - தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் 2 நாள் மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர ‘மொக்கா’ புயல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து, வடக்கு, வடமேற்கு திசையில் சுமார் 560 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (மே 14) நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதிதீவிர புயலாக கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 150-160 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 175 கி.மீ. வேகத்திலும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 14, 15-ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16, 17-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 82 - 100 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கும்.

13-ம் தேதி காலை 8.30 மணிவரையிலான 24 மணி நேரத்தில்,அதிகபட்சமாக குமரி மாவட்டம்முள்ளங்கினாவிளையில் 6 செ.மீ.,குருந்தன்கோடு, தக்கலையில் 5 செ.மீ., மாம்பழத் துறையாறில்4 செ.மீ., அணைக்கிடங்கு, நாகர்கோவில், கோழிப் போர்விளையில்3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல், தமிழக - இலங்கை கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 14, 15-ம் தேதிகளில் 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (14-ம் தேதி) அதிகபட்சமாக 220 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். புயல் கரையை கடக்கும்போது, 150-160 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 175 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in