

சென்னை: சென்னை மாநகர பகுதியில் பொதுஇடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.21.48 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி திடக் கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை, கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஏப்.27 முதல் மே 11-ம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.11 லட்சத்து 55 ஆயிரத்து 90, கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.9 லட்சத்து 93 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது இடங்கள், சாலைகளில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகள் கொட்டுவதை தவிர்த்து மாநகரை தூய்மையாக பராமரிக்க மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள், காலி மனைகளில் அதிக குப்பை காணப்பட்டால், மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.