Published : 17 Jul 2014 06:41 PM
Last Updated : 17 Jul 2014 06:41 PM

கோவை: கல்லாறு வனத்தில் கதறும் காதலர்கள்!

தனிமைக்கு ஒதுங்கும் காதலர்களிடம் மிரட்டி பணம் பறிப்பதற்கும், அதில் சிக்கும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் என்றே ஒரு கும்பல் திரிவதும், போலீஸில் அகப்படுவதும், பெண்களின் வாழ்க்கை கருதி குற்றவாளிகள் தப்பித்து விடுவதும் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி நடக்கிறது.

கோவை குற்றாலம், மருதமலை, மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயில், அனுவாவி சுப்பிரமணியர் கோயில் என வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த தவறுகள் நடைபெற்று வருவது கண்டறியப்பட்டு போலீஸாரும், வனத் துறையினரும் கடும் நடவடிக்கை எடுத்ததால், இந்த பகுதிகளில் குற்றங்கள் குறைந்துள்ளன.

இத்தகைய குற்றங்கள் கோவை மாவட்டம் கல்லாறு பழப்பண்ணை அருகே உள்ள வனப் பகுதியில் மிகுதியாக நடப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பழப் பண்ணை பாழ்பட்டு கிடப்பதும் ஒரு காரணம் என்கின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அரசு தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான இந்த பழப் பண்ணை.

அரிய மூலிகை வகைகளும், பட்டர் ப்ரூட் உள்பட அபூர்வ பழ வகைகளும், மங்குஸ்தான் எனப்படும் அதிசய மர வகைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் வனப் பகுதியாக இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கே வருவதுண்டு.

ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பழப் பண்ணைக்கு வி.வி.கிரி, நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் வந்து சென்றுள்ளனர்.

இந்த பழப் பண்ணை 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்படாது இருந்த கட்டிடத்தில் மட்டும் தற்போது பழப்பண்ணை அலுவலகம் செயல்படுகிறது. இந்த பழப் பண்ணையை புனரமைக்க போதுமான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யாதாதால் தற்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. இதை சாதகமாகப் பயன்படுத்தி காதல் ஜோடிகள் இந்த பழப் பண்ணையை சுற்றியுள்ள வனப் பகுதிகளுக்குள் ஒதுங்குகின்றனர்.

இதை கண்ணோட்டம் விடும் சமூக விரோதக் கும்பல்கள், அவர்களை பின்தொடர்ந்து காதலனை மிரட்டி பணம் பறிப்பதும், காதலியிடம் நகைகளை பிடுங்குவதும், பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதும் நடைபெறுவதாக தெரிவிக்கின்றனர் பழப் பண்ணைக்கு அன்றாடம் பணிக்குச் சென்று வரும் கூலித் தொழிலாளர்கள்.

கடந்த சில வருடங்களில் மட்டும் இந்த காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் பெருகி விட்டதாகவும், பாதிக்கப்படும் காதலர்கள் போலீஸில் புகார் செய்யாமல் சென்று விடுவதும் தொடர்ந்து நடந்து வந்தது.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரு காதல் ஜோடியை சுற்றுப்புற மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கின்றனர். போலீஸார் விசாரித்து விட்டு பெண்ணின் எதிர்கால வாழ்க்கை கருதி சம்பந்தப்பட்ட கும்பல் மீது வேறு வழக்கை பதிவு செய்துவிட்டு காதல் ஜோடியை பத்திரமாக விடுவித்தனராம்.

இதன் உச்சகட்டமாக கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு காதல் ஜோடியை 5 பேர் கொண்ட கும்பல் மடக்கி, காதலியிடம் இருந்த ஐந்து பவுன் நகையை பறித்துவிட்டு, அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டிருக்கிறது.

அந்த பெண் அலறித்துடிக்க அந்த பகுதியில் சுற்றிப்பார்க்க வந்த இருவர் அதிர்ச்சியடைந்து ஆட்களை திரட்டி காதலர்களை காப்பாற்றி அந்த கும்பலை துரத்தியிருக்கிறது.

அதில் ஒருவன் மட்டும் அகப்பட மற்றவர்கள் தப்பிவிட்டனர். மீட்கப்பட்ட பெண்ணை அவர் வீட்டில் விட்டபோது பிரச்சினையாகியுள்ளது. பெற்றோரை சமாதானப்படுத்தி அந்தப் பெண்ணை வைத்து புகார் பதிவு செய்யாமல், கொள்ளை வழக்காக மாற்றி பிடிபட்ட ஒருவனை வைத்து மீதியிருக்கும் 4 பேரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனராம் போலீஸார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், 'இந்த பழப் பண்ணையை புனரமைத்து சுற்றுலா பயணிகளும், மக்களும் வந்து செல்ல ஏற்பாடு செய்தால் இந்த தப்புகள் நடக்க வாய்ப்பிருக்காது. அல்லது இங்கே ஒரு போலீஸ் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இதை விட பெரிய குற்றம் இங்கே நடந்து விட வாய்ப்புண்டு என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x