Published : 22 Oct 2017 11:09 AM
Last Updated : 22 Oct 2017 11:09 AM

தீபாவளியால் அறுவடை, வரத்து குறைந்தது: கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடும் உயர்வு - முருங்கை ரூ.160, பீன்ஸ் ரூ.80

தீபாவளி கொண்டாட்டம் காரணமாக அறுவடை, வரத்து குறைந்ததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் வருகின்றன. ஆந்திரா, கர்நாடகாவில் கனமழை பெய்ததால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து, கடந்த 2 வாரங்களாக விலை அதிகரித்தது.

கடந்த 2 நாட்களாக காய்கறிகள் வரத்து மேலும் குறைந்துள்ளதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி, நேற்று ரூ.45 ஆகவும், ரூ.70-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.80 ஆகவும், ரூ.35-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.60 ஆகவும், ரூ.100-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ.160 ஆகவும், ரூ.60-க்கு விற்கப்பட்ட அவரைக் காய் ரூ.70 ஆகவும் உயர்ந்துள்ளது.

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி ரூ.49-க்கும், அவரைக்காய் ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. ஜாம்பஜாரில் தக்காளி ரூ.60, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.90, முருங்கைக்காய் ரூ.180, அவரைக்காய் ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் கூறும்போது, ‘‘தீபாவளி கொண்டாட காய்கறி லாரி ஓட்டுநர்கள், விவசாயத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் சென்றதால், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. சில நாட்களாக காய்கறிகள் அறுவடையும் நடக்கவில்லை. தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து, அனைவரும் தங்கள் பணிக்குத் திரும்பியுள்ளதால், அடுத்த சில நாட்களில் காய்கறிகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x