பெரியார் பல்கலை. தேர்வுகள் தாமதத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பெரியார் பல்கலை. தேர்வுகள் தாமதத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் தாமதமானதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த 115 கல்லூரிகளில் வரும் 17-ம் தேதி தொடங்குவதாக இருந்த பருவத் தேர்வுகள் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட் டுள்ளன. ஜூன் 16-ம் தேதி நிறைவடையவுள்ள இத்தேர்வுகளின் முடிவுகள் ஜூலை மாத இறுதியில் தான் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கான பருவத் தேர்வுகள் கடந்த மாதமே நிறைவடைந்து விட்டன. அவற்றின் முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டு, அடுத்த மாதத் தொடக்கத்தில் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. அதற்குள்ளாக பெரியார் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இல்லை. அதனால், அந்த பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பயிலும் சுமார் 75,000 மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடியாத நிலைஏற்படும்.

பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுக்கான விடைத்தாள்கள் அச்சடிக்கும் பணிகள் இன்னும் நிறைவடையாததால் தேர்வுகள் தொடங்கப்படவில்லை. இதற்கு காரணம் நிர்வாகத்தின் அலட்சியம்தான்.

மாணவர் சேர்க்கை காலக்கெடு: விடைத்தாள்கள் அச்சடிப்பதற்காக ஆணைகள் தாமதமாக வழங்கப்பட்டது ஏன்? அதன் பின்னணியில் ஏதேனும் முறைகேடுகள் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு வசதியாக மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in