குமரியில் நடந்த சாலை விபத்தில் நடன கலைஞர்கள் 4 பேர் உயிரிழப்பு: சீர்காழி விபத்தில் தந்தை, மகன் உட்பட 4 பேர் மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் பகுதியில் நேற்று காரும்,  அரசு பேருந்தும் மோதிய விபத்தில் சேதமடைந்த வாகனங்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் பகுதியில் நேற்று காரும், அரசு பேருந்தும் மோதிய விபத்தில் சேதமடைந்த வாகனங்கள்.
Updated on
2 min read

நாகர்கோவில்/மயிலாடுதுறை: கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் நடனக் கலைஞர்கள் 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் 12 பேர், நேற்று முன்தினம் திருச்செந்தூர் அருகே கருங்குளத்தில் நடந்த கோயில் விழாவில் ஆடல்-பாடல் கலைநிகழ்ச்சி நடத்திவிட்டு நேற்று அதிகாலை காரில் ஊருக்கு புறப்பட்டனர். காரை அருமனையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டினார்.

திருநெல்வேலி- நாகர்கோவில் நெடுஞ்சாலையில் வெள்ளமடம் அருகே சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்குநேர் மோதியது. காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

விபத்தில் திருவரம்பைச் சேர்ந்த அஜித் (22), திருவிதாங்கோட்டைச் சேர்ந்த சதீஷ் (37), அருமனை குழிச்சாணியைச் சேர்ந்த அபிஷேக் (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஓட்டுநர் கண்ணன்(23) உயிரிழந்தார்.

மார்த்தாண்டம் விக்னேஷ்(22), நெய்யாற்றின்கரை அஜிதா(37), இவரது மகள்கள் அனந்திகா(18), அனாமிகா(11), திருவரம்பு நிதீஷ் (18), திருவட்டாறு சஜின்(18), சிதறால் அஸ்வந்த்(16) மற்றும் பேருந்தில் பயணித்த ஆரல்வாய்மொழி எட்வின்(22) ஆகியோர் காயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கலை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கார் ஓட்டுநர் உட்பட அனைவரும் தூக்க சோர்வில் இருந்ததால், விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஆரல்வாய்மொழி போலீஸார் விசாரிக்கின்றனர்.

சீர்காழி அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து, டேங்கர் லாரி.
சீர்காழி அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து, டேங்கர் லாரி.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், தீவிர காயமடைந்த 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மற்றொரு விபத்தில் 4 பேர் மரணம்: இதேபோன்று, திருத்துறைப்பூண்டியிலிருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி புறப்பட்ட அரசு விரைவுப் பேருந்து ஒன்று, இரவு 11.30 மணியளவில் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரக்குடி என்ற இடத்தில் சாலையோரம் பழுதாகி நின்ற எண்ணெய் லாரி மீது மோதியதுடன், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சிதம்பரம் வெய்யலூர் பத்மநாபன்(39), அவரது மகன் அருள்ராஜ்(16), எம்.கே.தோட்டம் பகுதி பாலமுருகன்(35) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். திருவண்ணாமலை கருமாரப்பட்டியைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துநர் விஜயசாரதி(48) உட்பட 26 பேர் காயமடைந்தனர்.

போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், நடத்துநர் விஜயசாரதி உயிரிழந்தார். மற்ற 25 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீர்காழி போலீஸார் பேருந்து ஓட்டுநர் பிரதாப்(38), டேங்கர் லாரி ஓட்டுநர் ஜான் பியர்(39) ஆகியோரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in