50 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தந்தைக்கு செய்யாறில் இறப்பு சான்றிதழ் வழங்காததால் மகள் விரக்தி: தாலி, கம்மல் வழங்கியதால் சலசலப்பு

50 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தந்தைக்கு செய்யாறில் இறப்பு சான்றிதழ் வழங்காததால் மகள் விரக்தி: தாலி, கம்மல் வழங்கியதால் சலசலப்பு
Updated on
1 min read

திருவண்ணாமலை: 50 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தந்தைக்கு இறப்பு சான்றிதழ் வழங்காமல் அலைக் கழிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த மகள், செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் தாலி மற்றும் கம்மல் ஆகியவற்றை வழங்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இளநீர் குன்றம் கிராமத்தில் வசித்தவர் பரசுராமன். இவர், கடந்த1972-ல் உயிரிழந்துள்ளார். இவருக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு, செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில், அவரது மகள் திலகவதி கடந்தாண்டு ஜுன் மாதம் விண்ணப்பித்துள்ளார்.

இது குறித்து ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்குமாறு, செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் மூலம் கடந்தாண்டு நவம்பர் மாதம் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சேபம் தெரிவித்து யாரும் முறையீடு செய்யவில்லை எனகூறப்படுகிறது. இருப்பினும், இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான அடுத்தக்கட்ட பணியை மேற்கொள்ளாமல் வருவாய்த் துறையினர் மெத்தனமாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக, சார் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு திலகவதி அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அவர், தனது கணவர் உயிரிழந்த பிறகு தன்னிடம் உள்ள தாலி மற்றும் கம்மல் ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் நேற்று முன்தினம் கொடுத்து, இதன் பிறகாவது தனது தந்தைக்கு இறப்பு சான்றிதழ் வழங்குமாறு மன்றாடி கேட்டுள்ளார். இந்த நிகழ்வு சமூக வலைதளத்தில் வைரலானது.

இது குறித்து வட்டாட்சியர் வெங்கடேசன் கூறும்போது, “3 மாதங்களுக்கு முன்பு, திலகவதியின் மனு மீது விசாரணை நடத்தி, சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுவிட்டது” என்றார். இதையடுத்து சார் ஆட்சியர் அனாமிகாவிடம் கேட்டபோது, “மனுதாரரின் தந்தையான பரசுராமனுக்கு 5 வாரிசுதாரர்கள் உள்ளனர்.

அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆட்சேபம் உள்ளதா? என விசாரிக்கப்பட்டுள்ளனர். திலகவதி மனுவுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in