தமிழகத்தின் 37 மாவட்டங்களுக்கு 100 நாள் வேலை திட்ட குறைதீர்ப்பாளர்கள் நியமனம்

தமிழகத்தின் 37 மாவட்டங்களுக்கு 100 நாள் வேலை திட்ட குறைதீர்ப்பாளர்கள் நியமனம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தின் 37 மாவட்டங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான (100 நாள் வேலை) குறைதீர்ப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி சட்டம் பிரிவு 27-ன்படி அனைத்து மாநிலங்களிலும் குறைதீர்ப்பாளர் நியமிக்கப்படுகின்றனர்.

அதனடிப்படையில் தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி என, 37 குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலைகோருதல், ஊதியம் அளித்தல், ஊதியம் தாமதமாக வழங்கியதற்கு வழங்கப்படும் இழப்பீடு, பணித்தள வசதிகள் உள்ளிட்ட திட்டம் தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள், அலுவலகத்தில் அல்லதுகளஆய்வின்போது குறைதீர்ப்பாளரிடம் பதிவு செய்யப்படலாம்.

விதி அல்லது சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகள் தவிர அனைத்து புகார்களும், குறைதீர்ப்பாளரால் புகார் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது. மீதமுள்ள புகார்கள் 60 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது.

குறைதீர்ப்பாளரால் குறைகள் கையாளப்பட்ட விதம், பணிகளின் தரம் பற்றிய ஆய்வு மற்றும் திட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் போன்றவை அறிக்கையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வலை தளத்தில் வெளியிடப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள், திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் குறைதீர்ப்பாளர்களிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in