தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு
Updated on
1 min read

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்.14-ம் தேதி திமுக தலைவர்களின் சொத்து பட்டியல் என சில விவரங்களை வெளியிட்டார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் துபாய் சென்றபோது அங்குள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும், அந்தநிறுவனங்களுடன் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

இதைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் சார்பில், சென்னை பெருநகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

‘எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்த அண்ணாமலைக்கு எதிராக அவதூறு சட்டத்தின் கீழ் தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மூலமாக பொதுமக்களின் ஆதரவை முதல்வர் ஸ்டாலின் பெற்றுள்ளதை ஏற்க முடியாமல் அண்ணாமலை இதுபோல அவதூறு பரப்பியுள்ளார்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணையை சென்னை முதன்மை அமர்வு கூடுதல் நீதிபதி உமாமகேஸ்வரி, 8 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in