

சென்னை: பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அலுவலக உதவியாளர்பணிக்கான நியமன ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவர்முதுகலை தமிழ் பட்டதாரி. இவர்மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச மற்றும் தேசிய அளவிலானபாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில், விளையாட்டுத்துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த பாப்பாத்தி, தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதாகவும், தனக்கு வேலை வாய்ப்பு வழங்கும்படியும் கோரிக்கை விடுத்தார். அவரின்கோரிக்கையைப் பரிசீலித்த அமைச்சர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அலுவலக உதவியாளராகப் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாப்பாத்திக்கு பணி ஆணையை வழங்கினார். துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.