Published : 17 Oct 2017 10:29 AM
Last Updated : 17 Oct 2017 10:29 AM

மூழ்கிய கப்பலில் பணியாற்றிய தமிழக மாலுமிகளை காணவில்லை: ஆட்சியரிடம் பெற்றோர் புகார் மனு

பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த மாலுமிகளின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவர்களின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சோழம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் கிரிதர் குமார் (25). இவருடன் தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயலை சேர்ந்த பெவின் பர்னாண்டோ மகன் பெவின் தாமஸ் (22) என்பவரும் அட்மிரல் ஸ்டார் என்ற சரக்கு கப்பலில் மாலுமிகளாக பணியாற்றி வந்தனர். இவர்கள் சென்ற கப்பல் கடந்த 13-ம் தேதி தாய்லாந்தில் இருந்து சீனாவுக்குச் சென்றபோது பிலிப்பைன்ஸ் அருகே நடுக்கடலில் மூழ்கியது.

இதில் கிரிதர் குமாருக்கு திருமணமாகி, ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் சரக்கு கப்பல் ஒன்றில் மூன்றாம் நிலை மாலுமியாக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிரிதர் குமாரின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தங்களின் மகனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

அதேபோல் பெவின் தாமஸை மீட்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினர்கள் மற்றும் புன்னைக்காயல் கப்பல் மாலுமிகள் சங்கத்தினர் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x