Published : 23 Sep 2017 09:25 AM
Last Updated : 23 Sep 2017 09:25 AM
மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக மொரிஷியஸில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. இது தொடர்பாக சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு செல்வதை தடுக்கும் வகையில் அவரை தேடப்படும் நபராக அறிவித்து சிபிஐ லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த லுக்-அவுட் நோட்டீஸூக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஹ்தா ஆஜராகி, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் என்ன செய்தார்? என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்வதாக தெரிவித்தார். அதற்கு கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபில் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார்.
அதற்கு துஷார் மேஹ்தா, “கார்த்தி சிதம்பரத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது தனக்கு வெளிநாட்டில் ஒரே ஒரு வங்கி கணக்கு மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவர் ஏற்கெனவே வெளிநாட்டுக்கு சென்றபோது நிறைய வங்கி கணக்குகளை சட்டவிரோதமாக முடித்துவிட்டு வந்துள்ளார். இதுபோன்ற நிறைய விஷயங்கள் விசாரணையின்போது வெளியே வந்துள்ளன. அதைத்தான் இந்த சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளோம்’’ என்றார்.
அதற்கு கபில் சிபில், “கார்த்தி சிதம்பரத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இதுதொடர்பாக எந்தவொரு கேள்வியும் சிபிஐ தரப்பில் கேட்கப்படவில்லை. கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு வங்கி கணக்குகள் தொடர்பாக அவரின் கையெழுத்தை சிபிஐ காண்பித்தால், தாராளமாக எந்த வழக்கையும் தொடரட்டும் ” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்ய மறுத்து விசாரணையை வரும் அக்டோபர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT