Published : 01 Sep 2017 09:04 PM
Last Updated : 01 Sep 2017 09:04 PM

அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம், அரசுப் பணி: முதல்வர் அறிவிப்பு

அரியலூர் மாணவி அனிதா குடும்பத்திற்கு ரூபாய் 7 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் அனிதா இன்று தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த அனிதா குடும்பத்திற்கு ரூபாய் 7 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவ கண்மணிகள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஜெயலலிதாவின் அரசு மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும், அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்படும்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x