நாடு முழுவதும் நீட் தேர்வு தொடக்கம்: 490 நகரங்களில் 20.87 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னையில் நீர் தேர்வு எழுத சென்றவர்கள்
சென்னையில் நீர் தேர்வு எழுத சென்றவர்கள்
Updated on
1 min read

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று (ஞாயிறு) மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்ஸிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. 2023-24-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 490-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று (மே 7) மதியம் 2 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேசிய அளவில், 11.84 லட்சம் மாணவிகள், 9.03 லட்சம் மாணவர்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20.87 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 2.15 லட்சம் அதிகம். தமிழகத்தில் 95,823 மாணவிகள், 51,757 மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 1 லட்சத்து 47,581 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரம்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் 720 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in