

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் 15 ஆண்டுகளை கடந்து பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை கடந்த ஏப்.1-ம் தேதி முதல்அமலுக்கு வந்தது. இதை செயல்படுத்த அவகாசம் கோரி தமிழக போக்குவரத்து துறை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரசு துறைகளில் உள்ள பழமையான வாகனங்களின் பயன்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் தலை மையில் சென்னையில் கடந்த 5-ம் தேதி நடந்தது.
இதில், அனைத்து துறை சார்ந்த 2-ம் நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகனங்களை கழிவு செய்வதால் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்து சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர். வாகன அழிப்பு கொள்கை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, அனைத்து அரசு துறைகளிலும், 15 ஆண்டுகள் கடந்து பயன்பாட்டில் உள்ள வாகன விவரங்களை சமர்ப்பிக்குமாறு அலுவலர்களிடம் போக்குவரத்து ஆணையர் கேட்டுக் கொண்டார்.