

விழுப்புரம்: புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு உள்ள மாத்ரி மந்திரைச் சுற்றி, இப்பகுதியை உருவாக்கிய அன்னையின் கனவு திட்டமான கிரவுன் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இத்திட்டத்துக்காக மரங்கள் அகற்றப்படுகின்றன. இதற்கு ஆரோவில்லைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே ஆரோவில்லில், இரு தரப்பினராக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆரோவில் நிர்வாகத்தினர், பல்வேறு யூனிட்களில் பணியாற்றி வரும் சிலரை எந்த அறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்வதாகவும், நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படும் நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் ஒருதரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதே போன்று, வெளிநாடு செல்ல விரும்பும் ஆரோவில் வாசிகளை, நிர்வாகத்தினர் செல்ல விடாமல் பல்வேறு வழிகளில் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதை கண்டிக்கும் வகையிலும், ஆரோவில் நிர்வாகத்தை கண்டித்தும், நேற்று ஆரோவில் வாசிகளின் ஒரு தரப்பினர் ‘பார்வையாளர் மையம்' முன்பு இருந்து சோலார் கிச்சன் வரை பதாகைகள் ஏந்தி ஒற்றுமை அமைதி பேரணி மேற்கொண்டனர். அங்கிருந்து மீண்டும் ‘ பார்வையாளர் மையம்' வந்தடைந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.