அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த வெம்பக்கோட்டையில் கண்காட்சி அரங்கம்

அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த வெம்பக்கோட்டையில் கண்காட்சி அரங்கம்
Updated on
1 min read

சாத்தூர்: வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணி நடைபெற்று வரும் பகுதியில் கண்காட்சி அரங்கம் அமைக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த செப்டம்பர் இறுதிவரை இப்பணிகள் நடைபெற்றன.

இந்த அகழாய்வில், நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்கக் காலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு, நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து 2-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த மாதம் தொடங்கின.

இதிலும் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருட்களை காட்சிப் படுத்துவதற்காக கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்துக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பார்வையிட திறக்கப்படும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in