

சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, கரோனா விதிகளை மீறி, மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறைகேட்டை கண்டித்தும், மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், ஸ்டாலின் கைதை கண்டித்தும் போராட்டங்களில் ஈடுபட்டதாக, தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக அரியலூரில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் சிவசங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் சிவசங்கர் தரப்பில்,"உள்நோக்கத்துடன் தன்னை துன்புறுத்தும் நோக்கில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.