Published : 05 May 2023 04:21 PM
Last Updated : 05 May 2023 04:21 PM

வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு

கோப்புப்படம்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 7ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத் தாழ்வு மண்டலமாகி, புயலாக வலுபெறக் கூடும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை 6ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன்காரணமாக அப்பகுதிகளில் 7ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது 8ம் தேதி வாக்கில் காற்றழுத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்தி வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

இதன்காரணமாக, இன்று, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 6ம் தேதி முதல் 9ம் தேதி, வரையிலான 4 நாட்களுக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 7ம் தேதி காற்றழுத் தாழ்வுப் பகுதி உருவாகி புயலாக வலுபெறக்கூடும் என்பதால், 6,7,8 மற்றும் 9-ம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடலில் மணிக்கு 70 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x