

செம்பாக்கம்: தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டலத்தில் மாநகராட்சியின் திடக்கழிவுகளை அகற்றும் வாகனத்தில் நேற்று மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. மாநகராட்சி நகர் நல அலுவலர் அருளானந்தம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, மருத்துவமனையின் மருந்து சீட்டுகளுடன் கிடந்த ஊசிகள், டியூப்கள், கையுறைகள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து ராஜகீழ்பாக்கம் சிக்னல் அருகே இயங்கி வரும் தனியார் மருத்துவமனை மருத்துவ கழிவுகளை சம்பந்தப்பட்ட ஏஜன்சிகளிடம் ஒப்படைத்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தாமல், மக்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் குப்பை வாகனத்தில் வீசியதற்காக ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த தொகையை கட்ட தவறினால் மருத்துவமனை சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இதேபோன்று மாநகராட்சி முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆய்வு செய்து விதிமீறலில் ஈடுபடும் மருத்துவமனைகள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.