185 செங்கற்சூளைகள் இழப்பீடு செலுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து

185 செங்கற்சூளைகள் இழப்பீடு செலுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து
Updated on
1 min read

சென்னை: கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 185 செங்கற்சூளைகள் தலா ரூ.32 லட்சத்தை சுற்றுச்சூழலுக்கான இழப்பீடாக செலுத்தும்படி மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாமாக முன்வந்து விசாரணை: கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 185 செங்கற்சூளைகளை மூட கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த 2021 ஜூனில் உத்தரவிட்டார். இதுதொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயமும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

பின்னர் மாவட்ட ஆட்சியர், மத்திய, மாநிலமாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுவை நியமித்து சுற்றுச்சூழல் சேத மதிப்பை மதிப்பிட உத்தரவிட்டது.

தலா ரூ.32 லட்சம் இழப்பீடு: இந்த குழு தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பிறகு ஒவ்வொரு செங்கற்சூளையும் தலா ரூ.32 லட்சத்தை சுற்றுச்சூழலுக்கான இழப்பீடாக செலுத்த வேண்டுமென மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து செங்கற்சூளைகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

இயற்கை நீதியை மீறிய செயல்: பின்னர் நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதிப்பை ஆய்வு செய்த கூட்டுக்குழுவின் அறிக்கையை செங்கற்சூளைகள் தரப்புக்கு வழங்காதது இயற்கை நீதியை மீறிய செயல் என்றும், இழப்பீட்டை நிர்ணயிக்க உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் கூறி இதுதொடர்பாக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.

ஆனால் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய நடைமுறையை முறையாக பின்பற்றி, கூட்டுக் குழுவின் அறிக்கையின் நகலை ஒவ்வொரு செங்கற்சூளை உரிமையாளருக்கும் வழங்கி, அவர்களிடம் விளக்கம் பெற்று இழப்பீடு நிர்ணயிப்பது தொடர்பாக 6 மாதங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in