நெல்லை சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் |  கோப்புப் படம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் குறுவட்டம், பாலாமடை கிராமத்திலிருந்து திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ள தனியார் எஸ்டேட்டை நோக்கி கடந்த 22-4-2023 அன்று வேனில் சென்றபோது தேனி மாவட்டம், போடிமெட்டு அருகே உள்ள தோன்றிமலை என்னுமிடத்தில் அவர்கள் சென்ற வேன் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது,

இதில் கல்குறிச்சியைச் சேர்ந்த வள்ளியம்மாள், க/பெ.செல்லத்துரை (வயது 70), மேலப்பாலாமடையைச் சேர்ந்த ஜானகி, க/பெ. ஆறுமுகம் (வயது 65), பாலாமடை, இந்திரா நகரைச் சேர்ந்த பெருமாள், த/பெ.செல்லையா (வயது 58), கொடியங்குளத்தைச் சேர்ந்த சுதா (வயது 25), கல்குறிச்சியைச் சேர்ந்த சுசிந்திரன், த/பெ. சுடர்ஒளி (வயது 8), மற்றும் சுரேந்திரன், த/பெ.சுடர்ஒளி (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் சீதாலெட்சுமி, க/பெ.சுடர்ஒளி மற்றும் இந்திராணி, க/பெ.பெருமாள் ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in