கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ஈரோட்டை சேர்ந்த சண்முகம்என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கூட்டுறவு சங்கங்களில் தகுதியில்லாத பலர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தகுதியான உறுப்பினர்களை சேர்த்து, இறந்த மற்றும் தகுதியில்லாத உறுப்பினர்களை நீக்கி, இது தொடர்பாக தகுந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதிடி.பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுகூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், வழக்கறிஞர் சினேகா ஆஜராகி, ‘‘கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பட்டியலைசரிபார்த்து, திருத்தி அனுப்பும்படி அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் ஏற்கெனவே கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. குறைபாடுகளை நீக்கி, தேர்தலை நியாயமாக நடத்த திருத்தப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை வெளியிடுவது அவசியம். இதற்கு 6 மாத அவகாசம் தேவை’’ என்றனர்.

அதையடுத்து நீதிபதிகள், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை திருத்தம் செய்து 6 மாத காலத்துக்குள் வெளியிட்டு, அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in