பேனா நினைவுச் சின்னம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்யாவிட்டால் வழக்கு: ஜெயக்குமார் திட்டவட்டம்

பேனா நினைவுச் சின்னம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்யாவிட்டால் வழக்கு: ஜெயக்குமார் திட்டவட்டம்
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கமத்திய அரசு வழங்கிய அனுமதியை மறுபரிசீலனை செய்யாவிட்டால், வழக்குத் தொடர்வோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை ஓட்டேரி பிரிக்ளின் சாலையில், அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை நேற்று திறந்துவைத்த ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

பொதுவாக, ஒரு ஆற்றின் முகத்துவார பகுதியில் மீன்கள் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். அதுதான் மீனவர்களின் வாழ்வாதாரம். மெரினா கடற்கரை, முகத்துவாரத்தில்தான் உள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துசெல்லும் நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பது, கடற்கரையின் அடையாளத்தை இழக்கச் செய்யும்.

இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் அனுமதி கொடுத்ததை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அதிமுக சார்பில் வழக்குத் தொடர்வோம்.

‘அதிமுகவில் தலைமை சரியில்லை. கட்சி 6-ஆக உடைந்துவிட்டது’ என்று பாஜக மாநிலப் பொருளாளர் சேகர் விமர்சித்துள்ளார். டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த பிறகு, அதிமுக தரப்பில் யாரும் பாஜகவை விமர்சிப்பது இல்லை. அந்த அளவுக்கு அதிமுகவினர் எல்லோரையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். இதுபோன்ற கட்டுப்பாடு, பாஜகவில் இல்லை.

அதிமுக கிளை செயலாளராக இருந்து, படிப்படியாக உயர்ந்து இன்று பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் பழனிசாமி. இந்நிலையில், அதிமுகவை விமர்சிப்பது ஏற்புடையதல்ல. இதுகுறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்காது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in