தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை (மே 1) பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக ஏப். 30, மே 1, 2, 3-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்.30-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 1-ம் தேதி திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், வேலூர்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்,கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய,லேசான அல்லது மிதமான மழைபெய்யக்கூடும்.

ஏப். 29-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோடநாடில் 8 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

ஏப். 30-ம் தேதி தென் தமிழககடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in