Published : 26 Sep 2017 08:48 AM
Last Updated : 26 Sep 2017 08:48 AM

போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,200 இடைக்கால நிவாரணம்: தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் வரும் டிசம்பரில் அமல்படுத்தப்படும். அதுவரையில், மாதந்தோறும் ரூ.1,200 இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்துள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்து அதிகாரிகள் கொண்ட குழு இதுவரையில் 13 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால், இன்னும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை.

மத்திய அரசின் 7-வது ஊதிய குழு பரிந்துரையின்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதற்கு நிர்வாகம் தரப்பில் தயக்கம் காட்டியதால் தொமுச, சிஐடியு உட்பட 10 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தன.

முத்தரப்புப் பேச்சுவார்த்தை

இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் யாசின்பேகம் முன்னிலையில் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துத் தொழிற்பயிற்சி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், போக்குவரத்துத் துறை செயலர் டேவிதார், இணை செயலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், தொழிற்சங்கங்கள் சார்பில் மு.சண்முகம், கி.நடராஜன் (தொமுச), அ.சவுந்தரராஜன் (சிஐடியு), சின்னசாமி (அ.தொ.பே) உட்பட 47 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு பேசினர். புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது எப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்பது, அதற்கான அரசின் நடவடிக்கைகள் உள்ளிட்ட குறித்து விரிவாகப் பேசப்பட்டன.

சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு போக்குவரத்துத் துறை அமைச் சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போக்குவரத்துக் கழகங்களின் பல்வேறு பிரச்சினை குறித்து தீர்வு ஏற்பட்ட பிறகு ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்படும். அதுவரையில், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.1,200 வழங்கப்படும். இந்தத் தொகை இம்மாதம் (செப்டம்பர்) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ரூ.7,000 கோடி

இதுதொடர்பாக தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் நஷ்டத்தை சீரமைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துவருகிறது, தொழிலாளர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யும் தொகை மீண்டும் எப்போது ஊழியர்களின் கணக்கில் சேர்க்கப்படும், இதுவரையில் பிடித்தம் செய்துள்ள ரூ.7,000 கோடியை எப்போது நிர்வாகம் திரும்ப செலுத்தப் போகிறது என பேச்சுவார்த்தையில் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். வரும் 9-ம் தேதி நீதிமன்றத்தில் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். மாதந்தோறும் ரூ.1,200 இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். டிசம்பரில் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எங்கள் தொழிற்சங்கங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அதன்பிறகு, வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x