Published : 11 Sep 2017 09:30 AM
Last Updated : 11 Sep 2017 09:30 AM

வனப்பகுதி நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கிய வழக்கு: ஜெயந்தி நடராஜனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய சிபிஐ

வனப்பகுதி நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனுக்கு எதிரான ஆதாரங்களை சிபிஐ திரட்டியுள்ளது.

காங்கிரஸ் கூட்டணி அரசில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். இவர் சென்னை ஆழ்வார்பேட்டை நடேசன் காலனியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் டெல்லி சிபிஐ அதிகாரிகள் இவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். 3 கார்களில் வந்த 10 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்தில் யானைகள் வனத்துக்கு சொந்தமான 192 ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில் 55 ஹெக்டேர் நிலத்தை முறைகேடாக தனியார் தாது உற்பத்தி நிறுவனமான ‘எலக்ட்ரோ ஸ்டீல் கேஸ்டிங்’ என்ற நிறுவனத்துக்கு 2012-ம் ஆண்டு ஒதுக்கியதாக புகார் எழுந்தது. இதில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

குற்றச் சதியில் ஈடுபட்டதாகவும், அரசுப்பதவி மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த 7-ம் தேதி ஜெயந்தி நடராஜன், எலக்ட்ரோ ஸ்டீல் கேஸ்டிங் நிறுவன பொது மேலாளர் உமாங் கேஜ்ரிவால் மற்றும் சிலர் மீது 120-பி (கூட்டுச்சதி), லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு 13(1), 13(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்தே நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஜெயந்தி நடராஜன் வீடு உட்பட அவர் தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் சுமார் 20 மூட்டை அளவுக்கு ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளனர். மேலும், வனப்பகுதி நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கியது குறித்த ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் இருக்கும் ஜெயந்தி நடராஜன், இந்தியா திரும்பி வந்ததும் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x