தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் வரும் 30 மற்றும் மே 1-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், நாளை (ஏப். 29)சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, வரும் 30 மற்றும் மே 1-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப். 30-ம் தேதி நீலகிரி, கோவை,ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், மே 1-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in