

கரூர்: தமிழக அரசு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அதிமுக ஐடி விங்க் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள முறப்பாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த 25-ம் தேதி அவரது அலுவலகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆற்று மணல் கொள்ளையர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள் அவரை வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக் (35). அரசு, முதல்வர், மின்துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கரூர் நகர போலீஸார் கார்த்திக்கை இன்று (ஏப்.27) கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த அதிமுகவினர் கரூர் நகர காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கார்த்திக்கை சிறையில் அடைத்தனர்.