Published : 04 Sep 2017 08:30 AM
Last Updated : 04 Sep 2017 08:30 AM

சங்கரமடம் அருகே மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண்கள் புகார்

சங்கரமடம் அருகே மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடையினாலும் மற்றும் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் அதிகாலையில் நடைபெறும் மது விற்பனையாலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பியிடம் இந்தப் பகுதி பெண்கள் புகார் அளித்துள்ளதுடன், நேரடி நடவடிக்கை தேவை எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதியில் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே மற்றும் ரயில்வே சாலை, மேட்டுத்தெரு, சர்வதீர்த்த குளம், செவிலிமேடு, டோல்கேட், ராஜவீதிகள் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 13-க்கும் மேற்பட்ட மதுக் கடைகள் மூடப்பட்டன. இதனால், நகரப் பகுதிவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும், ராஜாஜி மார்க்கெட் பகுதியில் 2 மதுக்கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதனால், மார்க்கெட்டுக்கு வரும் பெண்கள் பல்வேறு இன்னல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காஞ்சி நகரில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சங்கரமடம் அருகிலும், மேட்டுத்தெரு பேருந்து நிலையம் அருகிலும் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும் தெரியவருகிறது. உள்ளூர் போலீஸாரின் துணையோடுதான் சட்டவிரோதமாக இப்படி மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது. அதனால், எஸ்பி நேரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் பிரமிளா கூறியதாவது: ராஜாஜி மார்க்கெட் பகுதியில், நடைபெறும் மது விற்பனை குறித்து மாதர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் புகார் தெரிவித்தும், போலீஸாரின் துணையோடு தொடர்ந்து விற்பனை நடைபெறுவது வேதனைக்குரியது. அதனால், மாவட்ட காவல்துறை நிர்வாகம் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானியிடம் கேட்டபோது: ராஜாஜி மார்க்கெட் பகுதியில் நடைபெறுவதாக கூறப்படும் சட்ட விரோத மதுவிற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். உடனடியாக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு விற்பனை தடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x