Published : 06 Sep 2017 09:47 AM
Last Updated : 06 Sep 2017 09:47 AM

ஜெயலலிதா வசித்த ‘வேதா நிலையம்’: சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா?- ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லம், சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பான ஆவணங்களை வரும் 8-ம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த தங்கவேலு என்ற பொறியாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும். எனவே, வேதா நிலையத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் உள்ள இடம் அவரது தாயார் சந்தியா பெயரில் கடந்த 1960-ல் வாங்கப்பட்டது. இந்த இடத்தை கையகப்படுத்தவோ அல்லது உரிய தொகையைக் கொடுத்து நினைவு இல்லமாக மாற்றவது என்பது இருதரப்புக்கும் உள்ள பிரச்சினை. இதில் மூன்றாவது நபர் தலையிட வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘மனுதாரர் குறிப்பிடும் வேதா நிலையம், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் இணைக்கப்பட்டுள்ளதா?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், ‘‘வேதா நிலையம் சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்படவில்லை. அதற்கான உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்கிறோம்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பான ஆவணங்களை தமிழக அரசு செப்டம்பர் 8-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x