காய்ச்சல், உயர் ரத்த அழுத்தத்துக்கான 48 மருந்துகள் தரமற்றவை: மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

காய்ச்சல், உயர் ரத்த அழுத்தத்துக்கான 48 மருந்துகள் தரமற்றவை: மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
Updated on
1 min read

சென்னை: காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 48 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

ஆய்வின்போது போலி அல்லது தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 1,497 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், கால்சியம், இரும்புச் சத்து, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 48 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

வெளி மாநில தயாரிப்பு: பெரும்பாலான மருந்துகள் இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. இதுகுறித்த விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in